டெல்லி: ஊதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இந்திய ஹாக்கி வீரர்களுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வீரர்கள் பயிற்சியை தவிர்த்தால் சஸ்பெண்ட் செய்யவும் தயங்கமாட்டோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்தாண்டு நிலுவையில் உள்ள ஊதியத் தொகை மற்றும் கிரேடு முறை ஆகியவற்றை வலியுறுத்தி இந்திய ஹாக்கி வீரர்கள் பயிற்சி முகாமை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து ஹாக்கி சங்க நிர்வாகிகள், வீரர்கள் தரப்பினருடன் கடந்த சனிக்கிழமை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நிலுவைத் தொகை வழங்குவதற்கான கெடு குறித்து தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை எனக் கூறி வீரர்கள் நேற்று தங்களின் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.
இதற்கிடையே, பயிற்சியில் பங்கேற்காமல் தவிர்க்கும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது.
ஹாக்கி சங்கத் தலைவர் அஷோக் குமார் மட்டூ இதுபற்றி கூறுகையில், 'அணிக்கு ஸ்பான்சர்கள் கூட இல்லை என்பது வீரர்களுக்கே தெரியும். இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், சங்கத்திடம் இருக்கும் நிதியை தருகிறோம் என கூறினோம்.
ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக போராடுகிறார்கள். வீரர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். பயிற்சியை புறக்கணித்து போராடுவது மிரட்டுவதற்கு சமம். பயிற்சி முகாமில் பங்கேற்காத வீரர்களை இடைநீக்கம் செய்வது குறித்தும் பரிசீலிப்போம்' என்றார்.
வீரர்களை சமரசப்படுத்துவதற்காக மகாராஷ்டிர ஹாக்கி சங்க நிர்வாகி இக்ரம் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கூடுதலாக 22 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியலை ஹாக்கி சங்கம் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.