கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஹாக்கி பிரிவில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது.
மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. இதில் 220 பேர் கொண்ட இந்தியக் குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதலில், மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி, சஞ்சிதா சானு தங்கம், தீபக் லேதர் வெண்கலம் என்று இதுவரை நான்கு பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது
பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் பிரிவுகளில் இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் ஆடவர் ஹாக்கியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை விளையாட உள்ளது. பரம வைரியான பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஹாக்கியில், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கடந்த முறை வெண்கலம் வென்ற இங்கிலாந்து, மலேசியா, வேல்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியா, நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி, 1-1 என வேல்ஸ் அணியுடன் டிரா செய்தது. இங்கிலாந்து அணி 7-0 என மலேசியாவை வென்றுள்ளது.
மகளிர் பிரிவில், ஆசிய சாம்பியனான இந்தியா, ஏ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் அணிகளுடன் உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, கானா ஆகியவை பி பிரிவில் உள்ளன.
இந்திய மகளிர் அணி 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இன்று நடந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது.