கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஹாக்கி பிரிவில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி விநாடியில் பாகிஸ்தான் கோலடிக்க, ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவானது.
மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. பளு தூக்குதலில், மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி, சஞ்சிதா சானு தங்கம், தீபக் லேதர் வெண்கலம், சதீஷ் சிவலிங்கம் தங்கம் என, இதுவரை ஐந்து பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ள பாட்மின்டனில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த காமன்வெல்த் போட்டியில் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றது. இந்த முறையும் பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்று அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், 10 அணிகள் பங்கேற்கும் ஆடவர் ஹாக்கி பி பிரிவில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தான் அணியை இன்று சந்தித்தது. இந்தப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சுனில் கடத்தி வந்து கொடுத்த பந்தை, தில்பிரீத் சிங் அபாரமாக கோலாக்கி, 1-0 என்று முன்னிலை பெற்றுத் தந்தார். அதற்கடுத்து, ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி 2-0 என முன்னிலையை உயர்த்தினார். பாகிஸ்தான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகள்
கிடைத்தும், நீண்ட அனுபவமுள்ள கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அவற்றை சிறப்பாக தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் மூன்றாவது காலிறுதியின் கடைசியில் கோலடித்து முன்னிலையை 2-1 என்று பாகிஸ்தான் குறைத்தது. கடைசி காலிறுதியில் வெற்றியை நோக்கி இரு அணிகளும் கடுமையாக போராடின. இரண்டு நிமிடங்களில் மூன்று கோல்கள் அடிக்கும் பாகிஸ்தான் முயற்சியை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக தடுத்து நிறுத்தினார். இந்த ஆட்டத்தில் அவருடைய சிறப்பான செயல்பாடுகளே, அணியை மிகப் பெரிய தோல்வியில் இருந்து காப்பாற்றியது.
கடைசி நிமிடங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டம் முடிவடைய 7 விநாடிகள் இருக்கையில், பாகிஸ்தானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணி கோலாக்க, ஆட்டம் 2-2 என்று டிராவில் முடிந்தது.