டெல்லி: கொரியாவில் நடக்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டிகள் கொரியாவின் டாங்கே நகரில் வரும் 13ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ராணி ராம்பாலுக்கு இந்தப் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், சீனியரான தடுப்பாட்டக்காரர் சுனித் லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த, 2016ல் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் பைனல்ஸில் சீனாவை வென்று, இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்றது.
அதன்பிறகு, 2017ல் ஆசியக் கோப்பை போட்டியிலும் சீனாவை வென்று கோப்பையை வென்றது. தற்போது கொரியவில் நடக்க உள்ள போட்டியில் மே 13ம் தேதி முதல் ஆட்டத்தில் ஜப்பானை சந்திக்கிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி.
இந்திய ஆடவர் அணியின் கோச்சாக இருந்த நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே, மீண்டும் மகளிர் அணியின் பயிற்சியாளராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங், ஆடவர் அணியின் கோச்சாகி உள்ளார். மரிஜ்னே கோச்சாகி உள்ள நிலையில், இந்த மகளிர் ஹாக்கி அணி விளையாடும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.
கோல் கீப்பர்கள் - சவிதா, ஸ்வாதி. தடுப்பாட்டம் - தீபிகா, சுனிதா லக்ரா (கேப்டன்), தீப் கிரேக் ஏக்கா, குர்ஜித் கவுர், சுமன் தேவி தவுடம்.
நடுகள ஆட்டக்காரர்கள் - மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர், உதிதா.
முன்கள வீரர்கள் - வந்தனா கடாரியா, லால்ரேம்சியாமி, நவ்னீத் கவுர், அனுபா பர்லா.