புவனேஸ்வர் : 2020 டோக்யோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது.
ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியா - அமெரிக்கா அணிகள் இரு போட்டிகளில் மோதின.

இரண்டு போட்டிகளில் எடுக்கும் மொத்த கோல்களின் அடிப்படையில் தான் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. முதல் போட்டியில் இந்தியா 5 - 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது.
இந்தியா 4 கோல் முன்னிலை பெற்றது. அதனால், இரண்டாவது போட்டியில் இந்தியா அமெரிக்காவுடன் சமன் செய்தாலோ, அமெரிக்காவை விட 3 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் கூட வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.
இரண்டாவது போட்டியில் அமெரிக்கா அபாரமாக ஆடி 4 கோல் அடித்தது. அதனால், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஒரே ஒரு கோல் அடிக்க, போட்டி முடிவில் அமெரிக்கா 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
எனினும், இந்தியா இரண்டு போட்டிகளின் முடிவில் 6 - 5 என்ற கணக்கில் 2020 ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது. இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளது.
1980ஆம் ஆண்டில் முதன்முறை ஒலிம்பிக் செல்ல தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, கடந்த 2016ஆம் ஆண்டிலும் தகுதி பெற்று இருந்தது. தற்போது 2௦20 ஒலிம்பிக் தொடருக்கும் தகுதி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் செல்ல உள்ளது.