சென்னை: சென்னையில் நடைபெற்ற 2025 ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய ஜூனியர் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3-வது இடத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது இந்தியா.
ஒரு கட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி, கடைசி 10 நிமிடங்களில் வெறியாட்டம் ஆடி 4 கோல்களை அடித்து வெற்றியைப் பறித்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

வெண்கலப் பதக்கத்துக்கான இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே நிகோலஸ் ரோட்ரிக்ஸ் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோல் அடிக்க, அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. முதல் பாதி முழுவதும் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியிலும் அர்ஜென்டினாவின் கை ஓங்கியிருந்தது. 44-வது நிமிடத்தில் சான்டியாகோ பெர்னாண்டஸ் மற்றொரு கோல் அடிக்க, அர்ஜென்டினா 2-0 என வலுவான நிலைக்குச் சென்றது. இந்தியாவின் பதக்க கனவு கலைந்துவிட்டதோ என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால், 4வது கால் பகுதியில் (4th Quarter) ஆட்டம் தலைகீழாக மாறியது. இந்திய ஜூனியர் சிங்கங்கள் சிலிர்த்து எழுந்தன. 49-வது நிமிடத்தில் அங்கித் பால் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி நம்பிக்கையூட்டினார் அப்போது ஸ்கோர் - 1-2 என்று ஆனது.
52-வது நிமிடத்தில் மன்மீத் சிங் மற்றொரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமனானது. மைதானம் அதிர்ந்தது. 57-வது நிமிடத்தில் கடைசி நேரத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை, சாரதா நந்த் திவாரி கோலாக மாற்ற இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. 58-வது நிமிடம்: அன்மோல் எக்கா கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இந்தியா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கோல்கீப்பர் பிரின்ஸ்தீப் சிங் பல முக்கியமான தடுப்புகளைச் செய்து அணியைக் காத்தார். 2016-ல் தங்கம் வென்ற பிறகு, இடையில் பதக்கம் வெல்லாத குறையை, இந்த வெண்கலப் பதக்கம் மூலம் இந்தியா போக்கியுள்ளது.
இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் 1-1 என சமனில் முடிந்ததால், பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் வென்று ஜெர்மனி அணி 8-வது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை வென்றது.