ஹாக்கி வீரர்கள் அதிரடி: பணிந்தது கர்நாடக அரசு-பரிசுகளை அறிவித்தது
பெங்களூர்:
ஹாக்கி வீரர்களை கர்நாடக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளியா அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடக அரசு அவசரம் அவசரமாக, இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கர்நாடக வீரர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
20-20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கார் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வீரர் சார்ந்த மாநில அரசுகளும், பரிசுகளை வழங்கியுள்ளன.
இது இந்திய ஹாக்கி வீரர்களை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கு ஹாக்கியை மதிப்பதில்லை என்று இந்தியப் பயிற்சியாளர் ஜோக்கிம் கார்வல்ஹோ வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த கர்நாடகத்தைச் ேசர்ந்த வீரர்களுக்கு இதுவரை கர்நாடக அரசு ஒரு பரிசையும் வழங்கவில்லை, வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்று குமுறல் வெளியிட்டிருந்தார்.
இதை எதிர்த்து கர்நாடக முதல்வரின் வீடு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த வீர்ரகளான சுனில், விக்ரம் காந்த், ரகுநாத், இக்னேஸ் திர்க்கி ஆகியோரும், பயிற்சியாளர் ரமேஷ் பரமேஸ்வரனும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தார்.
இது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவசரம் அவசரமாக பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள நான்கு கர்நாடக வீரர்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்படிப் பரிசையும், பாராட்டையும் கேட்டு வாங்கும் அளவுக்கு நமது ஹாக்கி இருப்பது ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுணிய வேண்டிய விஷயமாகும்.


Click it and Unblock the Notifications