கோலாலம்பூர் : ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, கனடா அணியை பிளந்து கட்டி 10 கோல் அடித்து திணற வைத்தது. இந்தப் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு இந்திய ஜூனியர் ஹாக்கி அணி தகுதி பெற்றது.
ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அதில் குரூப் சி-யில் இந்தியா இடம் பெற்றுள்ளது. வலுவான ஸ்பெயின் அணியிடம் தோல்வியை சந்தித்த போதும், தென் கொரியாவை வீழ்த்தி இருந்தது இந்திய அணி. அடுத்து குரூப் சுற்றின் கடைசி லீக் போட்டியில் கனடா அணியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் வென்றால் குரூப் சி பிரிவில் இரண்டாம் இடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கனடாவை எதிர்த்து 10 கோல்கள் அடித்தனர் இந்திய வீரர்கள். கனடா ஒரு கோல் மட்டுமே அடித்தது.
இந்தியா சார்பில் ஆதித்யா அர்ஜுன் லாலேஜ் 2 கோல்கள் (8', 43'), ரோஹித் 2 கோல்கள் (12', 55'), அமந்தீப் லக்ரா 2 கோல்கள் (23', 51'), விஷ்ணுகாந்த் ஒரு கோல் (42'), ராஜிந்தர் ஒரு கோல் (42'), குஷ்வாஹா சௌரப் ஆனந்த் ஒரு கோல் (51) ') மற்றும் உத்தம் சிங் ஒரு கோல் (58') அடித்தனர். கனடா அணியின் ஜூட் நிக்கல்சன் ஒரு கோல் (20') அடித்து இருந்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் காலிறுதியில் இந்தியா, குரூப் டி-யில் வெற்றி பெற்று இருக்கும் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அது நாக் - அவுட் போட்டி என்பதால் இந்தியா அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும்.