இன்சியான்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும்போது எல்லாம் தனது ரத்தம் கொதிப்பதாக ஆசிய விளையாட்டில் தங்க பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி ஹீரோ பி.ஆர். ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றுள்ளது. பாகிஸ்தானும், இந்தியாவும் தலா 1 கோல்கள் அடித்து சமமான நிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் நடந்தது. அதில் பாகிஸ்தான் வீரர்கள் அடித்த 2 கோல்களை தடுத்து இந்தியாவுக்கு வெற்றி கிடைக்க வழிவகுத்தவர் கோல் கீப்பரும், துணை கேப்டனுமான பி.ஆர். ஸ்ரீஜேஷ். பெனால்டி ஷூட் அவுட்டின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்நிலையில் வெற்றி குறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில்,
நான் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதாக மக்கள் தெரிவித்தனர். அது உண்மை தான். காரணம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது எனது ரத்தம் கொதிக்கும், பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பு வரும்.
காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அப்பா இந்த முறை உனக்கு தங்கப் பதக்கம் கொண்டு வருவேன் என்று என் மகளிடம் தெரிவித்தேன். அதன்படி தங்கம் வென்றுள்ளேன் என்றார்.