பாரிஸ்: ஸ்பெய்ன் அணிக்கு எதிரான வெண்கலப் பதக்க போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த பின் இந்திய ரசிகர்கள் பலரும் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.
இதனிடையே இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், இதுதான் தனது கடைசி போட்டி என்று அறிவித்தார். இதனால் இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டிய கட்டாயம் இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் முன் நின்று 2 கோல்களை அடிக்க, ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 52 ஆண்டுகளுக்கு பின் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கடைசி நேரத்தில் ஜெர்மனி அணிக்கு அடித்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் அசத்தலாக நின்று ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தினார். இந்த வெற்றியால் இந்திய வீரர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய வீரர்கள் அனைவரும் சேர்ந்து கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை நோக்கி வந்து அவரை கட்டியணைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் ஸ்ரீஜேஷ் நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்த, ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வாழ்த்து கூறினர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை தனது தோளில் தூக்கி கொண்டாடினார்.
தொடர்ந்து தனது ட்ரேட்மார்க் கொண்டாட்டமான கோல் போஸ்ட் மீது ஏறி கால்களை ஆட்டி ஸ்ரீஜேஷ் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி கைப்பற்றும் 13வது பதக்கம் இதுவாகும்.
இதுவரை இந்திய அணி 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி இழந்திருந்த ஹாக்கியின் பெருமையை மீட்டெடுத்துள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.