லாகூர்: கிரிக்கெட்டில் தான் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது என்றால், அந்த நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் ஷகீல் பட், விமான நிலையத்திலேயே நிர்வாகத்தை வெளுத்து வாங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கும்போது அவர் கண் கலங்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லாகூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஷகீல் பட், "நாங்கள் விளையாடச் செல்வதற்கு முன் சமையலறையைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களிடம் இருந்து எப்படி வெற்றியை எதிர்பார்க்கிறீர்கள்? தற்போதைய நிர்வாகத்துடன் எங்களால் இனி பயணிக்க முடியாது. இது போதும்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஹாக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்குச் சரியான ஏற்பாடுகள் கூடச் செய்து தரப்படவில்லை. சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கியதும், சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாகப் பசியும் பட்டினியுமாகத் தவிக்க விடப்பட்டுள்ளனர். ஹோட்டலுக்குச் சென்றால், முன்பணம் செலுத்தாததால் அறை கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் தேசிய அணி வீரர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் ஆஸ்திரேலியத் தெருக்களில் அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பின்னரே பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அறை கிடைத்தது. சரியாக இந்த சம்பவம் நடந்த மறுநாளே பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் விளையாடி 2 - 3 என தோல்வி அடைந்தது. அடுத்து ஜெர்மனி அணியுடனும் தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் விளையாட்டு வாரியம், இந்தச் சுற்றுப்பயணத்திற்காக ஹாக்கி சம்மேளனத்திற்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் (பாகிஸ்தான் மதிப்பில்) ஒதுக்கியிருந்தது. ஆனால் அந்தப் பணத்தை நிர்வாகம் எதற்குச் செலவு செய்தது என்றே தெரியவில்லை. 13 நாட்கள் தங்க வேண்டிய இடத்தில், வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே விடுதி முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடைசி 3 நாட்கள் மலிவான இடத்திற்கு மாற்றப்பட்டோம் என்று கேப்டன் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு வாரியமும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
"ஊடகங்களிடம் இதுபற்றிப் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹாக்கி சம்மேளனம் எங்களை மிரட்டியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நாங்கள் பட்ட அவமானத்தை வெளியே சொல்லியே ஆக வேண்டும். வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டால் மட்டுமே பாகிஸ்தான் ஹாக்கி முன்னேறும்" என்று ஷகீல் பட் தைரியமாகக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், வீரர்கள் மைதானத்தில் சிந்திய வியர்வையை விட, வெளியே சிந்திய கண்ணீரே அதிகம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிரிக்கெட்டில் பல்வேறு அரசியலை செய்து வரும் பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியை நடுத்தெருவில் தவிக்க விட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.