பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆட்டத்தில் இந்திய அணி பிரிட்டனை எதிர்கொண்டது. இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
நாக் அவுட் சுற்று என்பதால் ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தது. அனைத்திற்கும் மேலாக இந்த போட்டியில் இந்திய அணியின் அமித் ரோகிதாசுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் இந்திய அணி வெறும் பத்து வீரர்களை மட்டுமே வைத்து விளையாடியது.

இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் அதையும் மீறி இந்தியா இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் நமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கோல் அடித்தார். இதை அடுத்து ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் பிரிட்டன் வீரர் லீமார்டன் கோல் அடிக்க போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமமானது.
இதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில் போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற சமனில் முடிய வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணியில் நட்சத்திர கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இந்தியாவில் தூணாக விளங்கினார்.
முதலில் இரண்டு அணிகளுமே முதல் இரண்டு கோல்களை அடித்து சமனில் நிற்க ஸ்ரீஜேஸ் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரிட்டன் வீரரின் கவனத்தை திசை திருப்பி கோல் அடிக்க விடாமல் தடுக்க இந்திய வீர லலித் மூன்றாவது கோலை அடித்தார். இதை அடுத்து மீண்டும் பிரிட்டன் வீரர் கோல் அடிக்க வரும்போது ஸ்ரீஜேஸ் தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தி அவருடைய கோலை தடுத்தார்.
இதன் பிறகு இந்தியாவின் ராஜ் நான்காவது கோல் அடிக்க இந்திய அணி நான்குக்கு இரண்டு என்ற கணக்கில் பெனால்டி சூட் அவுட்டில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. வெறும் பத்து வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்திய அணி விளையாடியதும் தன்னுடைய கடைசி தொடரில் ஸ்ரீஜேஸ் நிகழ்த்திய மேஜிக்கும் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை இந்தியா பெற்றால் கூட பதக்கம் வெல்லும் வாய்ப்பு உறுதியாகிவிடும். கடந்த ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.