பெரும் எதிர்பார்ப்பு
இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியில் நவ்ஜோத் கார், குர்ஜித் கார், தீப் கிரேஸ் எக்கா, மோனிகா, நிஷா, நேஹா, சவிதா, ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, உதித்தா, நவநீத் ஆகியோர் களமிறங்கினர். இந்த போட்டியில் 2வது நிமிடத்திலேயே இந்தியாவின் குர்ஜித் கார் கோல் அடித்து அசத்தினார். கடந்த காலிறுதி ஆட்டத்தில் ஆஸி.க்கு எதிராக குர்ஜித் மட்டுமே கோல் அடித்து இருந்தார். இந்நிலையில், இன்றும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குர்ஜித் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, பெனால்டி கார்னர் மூலம், அர்ஜென்டினா தனது முதல் கோல்-ஐ பதிவு செய்தது. இரண்டாவது பாதியில் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் கோல் அடித்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வெண்கலம்
ஆனால், அதன் பிறகு இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. வீராங்கனைகள் கடைசி வரை எவ்வளவோ போராடியும் கோல் கிடைக்கவில்லை. இறுதியில், இந்திய மகளிர் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து, இந்திய அணி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிப் பெற்றால் வெண்கலம் வென்று புதிய சரித்திரம் படைக்கலாம்.
வெற்றி, தோல்வி
இந்நிலையில், அரையிறுதியில் தோற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் மற்றும் பயிற்சியாளருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி ஆறுதலும், வாழ்த்துக்களும் தெரிவித்தார். அப்போது அவர், "அரையிறுதிப் போட்டிவரை வந்து தோற்றுவிட்டோமே என்று மனம் தளரக் கூடாது. நீங்கள் (ராணி ராம்பால் மற்றும் ஜோர்ட் மரிஜ்னே) வழிநடத்திய அணியானது ஒரு திறன்வாய்ந்த அணி. அந்த அணி மிகவும் கடுமையாக உழைத்துள்ளது. ஆகையால் நீங்கள் அடுத்தக்கட்டத்தை எதிர்நோக்கி நகருங்கள். வெற்றி, தோல்வி என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்" என்று கூறினார்.
ஜெர்மனியுடன் மோதல்
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல் 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினாலும் கூட அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்தது. இதனால், காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து ஆச்சர்யப்பட வைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் அணியை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது. ஏற்கெனவே, ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்து, நாளை (ஆக.5) வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.