டெல்லி : இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், ஹாக்கி போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு வயது 32 ஆகிறது.
இந்திய ஹாக்கி அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் மட்டுமே வென்றது, அந்த ஏமாற்றமும், இவரது ஓய்வு முடிவுக்கு பின்னே இருக்கலாம் என கருதப்படுகிறது.
சர்தார் சிங் 2006 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் ஆடி வருகிறார். 2008ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்தவர் சர்தார் சிங். இவர் சுமார் 350 போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்றுள்ளார்.
இவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்திய அரசு 2012இல் அர்ஜுனா விருதும், 2015இல் பத்மஸ்ரீ விருதும் வழங்கியுள்ளது. இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஆடிய இவர், 2020 ஒலிம்பிக்கில் இந்திய அணியில் பங்கேற்று ஆட வேண்டும் என சில வாரங்கள் முன்பு தான் கூறினார்.
எனினும், இப்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஹாக்கி இந்தியா சார்பில் பயிற்சிக்கு 25 இந்திய ஹாக்கி வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் சர்தார் சிங் பெயர் இடம் பெறவில்லை. இது தான் அவரது ஓய்வு முடிவுக்கு காரணமா? என செய்தியாளர்கள் கேட்டதை மறுத்துள்ளார் அவர்.
"என்னால் இன்னும் சில காலம் ஹாக்கி ஆட முடியும். ஆனால், அடுத்தது என்ன என்பது பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை புதிய விஷயங்களை நோக்கி நான் நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. 12 வருடங்கள் என்பது நீண்ட காலம். இது எதிர்கால இளைஞர்களுக்கான நேரம்" என கூறினார் சர்தார்.