டெல்லி: லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு கோல் கீப்பர் பரத் செட்ரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம்(ஜூலை) 27ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் கலந்து கொள்ள உள்ள 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற யுவ்ராஜ் வால்மிகி, ரூபிந்தர்பால் சிங் ஆகிய 2 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக அனுபவ வீரர்களான இக்னேஸ் திர்கே, குர்விந்தர் சிங் சண்டி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் போது, காயமடைந்த நிலையி்ல் இருந்த வால்மிகி பங்கேற்க முடியவில்லை. இதனால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகவில்லை.
மற்றபடி அஸ்லான் ஷா கோப்பைக்காக களமிறங்கிய மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் அணியி்ல் இடம் பெற்றுள்ளனர். 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணிக்கு கோல்கீப்பர் பரத் சேத்ரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்தார் சிங் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி:
கோல்கீப்பர்கள்: பரத் செட்ரி, ஸ்ரீஜேஷ்
தடுப்பாளர்கள்: வி.ஆர்.ரகுநாத், இக்னேஸ் திர்கே, சந்தீப் சிங்.
நடுகளம்: சர்தார் சிங்(துணை கேப்டன்), குர்பஜ் சிங், பிரேந்திர லக்ரா, மன்பிரீத்சிங்,
பார்வேடு: எஸ்.வி.சுனில், குர்விந்தர்சிங் சண்டி, ஷிவேந்திர சிங், டானிஷ் முஜ்தபா, துஷர் கண்டேகர், தரம்விர்சிங், எஸ்.கே.உத்தப்பா.
மாற்று வீரர்கள்: சர்வன்ஜித்சிங், கோதாஜித்சிங். தலைமை பயிற்சியாளர். மைக்கேல் ஜாக் நோப்ஸ்
பயிற்சியாளர்: முகமது ரியாஸ், மானேஜர்: டேவிட் இயான் ஜான்.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை சாம்பியனான இந்தியா 'குரூப் பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜூலை 30ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.