டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி போட்டியில் இந்திய அணி இத்தாலியை தோற்கடித்து 2-வது வெற்றி பெற்றது.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜுலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 12-ந்தேதி வரை லண்டனில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆண்கள் பிரிவில் இந்தியா, கனடா, பிரான்ஸ், போலந்து, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. மகளிர் பிரிவு ஆட்டமும் இந்தியாவிலேயே நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டம் வெல்லும் ஒரே அணி மட்டும் லண்டன் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும்.
இத்தாலியை துவம்சம் செய்தது
தொடக்க ஆட்டத்தில் சிங்கப்பூரை 15 கோல் போட்டு புரட்டி எடுத்த இந்தியா நேற்று இத்தாலியுடன் மோதியது. இதிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் இந்திய வீரர் சந்தீப்சிங் முதலாவது கோலினை அடித்து கணக்கை துவக்கி வைத்தார்.
முதல் பாதியில் மட்டும் இந்தியா 6 கோல்களை போட்டு அசத்தியது. இத்தாலியால் ஒரே ஒரு கோல் மட்டுமே திருப்ப முடிந்தது.
பிற்பாதியில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் அதனை இந்தியா நழுவ விட்டு விட்டது. 2 கோல்கள் மட்டுமே அடித்தது. முடிவில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது. இந்திய தரப்பில் சந்தீப்சிங் 3 கோல்களும் சுனில் 2 கோலும், ரகுநாத், சான்டி, ஷிவேந்திரசிங் தலா ஒரு கோலும் போட்டனர். இந்திய அணி பிரான்சை நாளை சந்திக்கிறது.
பெண்களிலும் வெற்றி
பெண்கள் பிரிவு ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று போட்டியும் இதே மைதானத்தில் தான் நடந்து வருகிறது. இதில் இந்தியா, உக்ரைன், கனடா, போலந்து, தென்ஆப்பிரிக்கா, இத்தாலி ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதன் தொடக்க ஆட்டத்தில் உக்ரைனுடன் 1-1 என்று சமன் செய்த இந்தியா, நேற்று கனடாவை சந்தித்தது. இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது, இந்திய மகளிர் அணி போலந்தை நாளை எதிர்கொள்கிறது.