For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவில்பட்டியில் இனி சூப்பரா விளையாடலாம்... ரூ. 7 கோடியில் வருகிறது ஹாக்கி ஸ்டேடியம்

சென்னை: கோவில்பட்டியில், உலகத் தரத்திலான ரூ. 7 கோடி மதிப்பிலான ஹாக்கி களத்தை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அம்மாவட்டத்திலுள்ள பெரும்பாலானோர் ஹாக்கி விளையாட்டை விரும்பி விளையாடி வருகிறார்கள். எனவே ஹாக்கி விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இந்த மாவட்டத்தில் ஏற்படுத்துவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தகுதித் திறன் வாய்ந்த ஹாக்கி வீரர்களை உருவாக்க முடியும்.

எனவே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரத்தில் 7 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி தளம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த தளத்தில் மழை நீர் வடிகால் கால்வாய்கள், மின்னொளி சாதனங்கள், ஹாக்கி தளத்தில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்கும் நீர் தெளிப்பான்கள் போன்ற வசதிகள் செய்து தரவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தமிழகத்தில் இறகு பந்து (பேட்மின்டன்) விளையாட்டில் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் உருவாக்கிட சென்னை, மதுரை, கடலூர், திருச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இறகுபந்து விளையாட்டுக் கழகம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கிடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கழகத்தின் மூலம் இறகு பந்து விளையாட்டு பயிற்சி அளிப்பதற்கும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவினங்கள், இறகுபந்து விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை ஒளிப்பதிவு செய்து, அதனை அடிக்கடி திரையிட்டு பார்த்து தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தவும், இந்த விளையாட்டுக்கான உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றிற்காக ஒவ்வொரு கழகத்திற்கும் 14 லட்சம் ரூபாய் வீதம் 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தக் கழகத்தில் மாதந்தோறும் 25 நாட்களுக்கு 15 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து 10 மாதத்திற்கு பயிற்சியளிக்கப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் விளையாட்டுகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காகவும், சிறந்த பயிற்சியினைப் பெற்றிடவும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவும், பல் கலைக்கழகங்களுக்கிடையே நடை பெறும் அகில இந்திய போட்டிகளில் தமிழக பல்கலைக்கழக அணிகள் வெற்றி பெற்றிட வழிவகை ஏற்படுத்தும் வகையிலும், மாநில அளவில் பல்கலைக் கழகங்களுக்கிடையேயான போட்டிகள் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கிடையே தடகளம், இறகு பந்து, கூடைப்பந்து, கால் பந்து, ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் 194 பேர்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு பெறும் 194 பேர்களுக்கு தலா 7,500 ரூபாய், மூன்றாம் பரிசு பெறும் 50 பேர்களுக்கு தலா 5,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இதே போன்று தமிழ்நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கிடையேயும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்றுநர்களின் பணியினை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியத்தை 8000 ரூபாயிலிருந்து 15000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக ஆண்டொன்றுக்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திலிருந்து அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேசிய மற்றும் உலக அரங்கில் நடை பெறும் போட்டிகளில் பங்கு கொள்ள வழிவகை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 12, 2013, 13:50 [IST]
Other articles published on Jul 12, 2013
English summary
Chief Minister Jayalalitha has ordered for a world class hockey turf in Kovilpatti at a cost of Rs 7 crore.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+