
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 8 ஆண்களுக்கு பிறகு கலந்து கொள்ளும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, நேற்று கலந்து கொண்ட முதல் லீக் போட்டியில் தோல்வியுடன் துவங்கி உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் 12 ஹாக்கி அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பி பிரிவை சேர்ந்த இந்தியா, நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. உலக ஹாக்கி தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பலமிகுந்த நெதர்லாந்து அணி துவக்கத்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபர்ட் வான் டெர் ஹார்ஸ்ட் முதல் கோலை அடித்தார்.
அடுத்த 9 நிமிடங்களில் (29வது நிமிடம்) நெதர்லாந்திற்கு கிடைத்த பெனால்டி கார்னரை, ரோடரிக் விய்ஸ்தோப் கோலாக மாற்றினார். முதல் பாதியின் முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் 2வது பாதியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினர் அடுத்து 2 கோல்களை அடித்தனர். 45 நிமிடத்தில் தரம்வீர் சிங்கும், 48வது நிமிடத்தில் ஷிவேந்திர சிங்கும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஆனால் அடுத்த 3 நிமிடத்தில் நெதர்லாந்திற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கொண்ட மிக் வான் டிர் வீர்டேன் கோல் அடித்தார்.
இதன்மூலம் போட்டியின் முடிவில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை நடைபெற உள்ள மற்றொரு லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
பி பிரிவின் மற்றொரு லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வீழ்த்தியது. ஏ பிரிவின் லீக் போட்டியில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 6-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. ஏ பிரிவின் மற்றொரு லீக் போட்டியில் பாகிஸ்தான், ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களை அடித்ததால் போட்டி டிராவில் முடிந்தது.