விக்டோரியா: கனடாவுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.கனடா சென்றுள்ள இந்திய அணி 7 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என வென்றது.இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று விக்டோரியா நகரில் நடந்தது. உலக ஹாக்கி தரவரிசையில் இரு அணிகளும் (கனடா 11வது இடம், இந்தியா 12வது இடம்) அடுத்தடுத்த நிலையில் இருப்பதால் போட்டி முதல் பாதியில் பரபரப்பாக இருந்தது.இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் மழை பொழிந்தனர். இந்தியா சார்பில் முகமது அமிர் கான் 4வது நிமிடம், சிவந்திர சிங் 21வது, தனஞ்சய் மகாதிக் 32வது ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பதிலுக்கு கனடா வீரர்களுக்கு 20வது, 23வது, 35வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.முதல் பாதி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்க கடுமையாக போராடின். ஆனால், பலன் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆட்டம் முடிய 4 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் தனஞ்சய் மீண்டும் ஒரு கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #13;