
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 81 வீரர்கள், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்த முறை ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இந்திய ஹாக்கி அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய வீரர்களிடையே பதட்டத்தை போக்கி மனபலத்தை அதிகரிக்கும் வகையில் தினமும் 40 நிமிடங்கள் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பாரத் செட்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டி என்பது நாங்கள் பங்கேற்கும் தொடர்களிலேயே உயர்ந்தது என்பதால், வீரர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது சகஜம். எனவே இதனை தவிர்க்க தினமும் 40 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்து வருகிறோம். இதன் மூலம் மனதளவில் உறுதியாக முடிகிறது.
மேலும் பயிற்சியாளர்கள் மைக்கேல் ஜேக் நாப்ஸ், டேவிட் ஜான் ஆகியோருடன் தினமும் கலந்து ஆலோசனை நடத்துகிறோம். இதில் பயிற்சியாளர்கள் தங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். டேவிட் ஜான் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மனதை காட்சிப்படுத்துதல் என்ற தியான பயிற்சியிலும் தினமும் ஈடுபடுகிறோம்.
கடந்த ஒரு மாதமாக, போட்டிகளில் பங்கேறகும் முன்பு, மனதை காட்சிப்படுத்துதல் தியான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முறையில் நாங்கள் சமநிலையில் படுத்து கொண்டு வெளி உலகை மறந்துவிடுவோம். அதன்பிறகு போட்டியை குறித்து திட்டமிட்டு செயல்படுகிறோம்.
லண்டன் ஒலிம்பிக்கில், ஒவ்வொரு அணி மற்றும் போட்டிகளுக்கு ஏற்ப அவ்வப்போது திட்டமிட்டு செயல்பட தீர்மானித்து உள்ளோம்.
கடந்த 1948ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற லிஸ்லி கிளாடீஸ் மற்றும் கேசவ் தத் ஆகியோரை சந்தித்தேன். அப்போது ஒலிம்பிக் போட்டி குறித்து பேசினேன். லண்டன் ஒலிம்பிக் போட்டி என்பது சவால் மிகுந்தது என்பது தெரியும். ஆனால், நமது பலவீனத்தை பலமாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் அறிவுரை கூறினர்.
வீரர்கள் இடையே பந்தை பரிமாறும் திறன் அதிகரிக்க வேண்டியுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி கலந்து கொண்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது. இதேபோல லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் சிறப்பாக செயல்பட கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த 6 மாதங்களாக இந்திய அணியி்ல் உள்ள வீரர்கள் சேர்ந்து ஆடி வருகிறோம். எனவே வீரர்கள் இடையே ஒருமித்து செயல்படும் பண்பு அதிகரித்துள்ளது. இதனால் எதிர்பார்ப்பிற்கும் மேலாக இந்திய அணி சாதிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.