கராச்சி: கராச்சியில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹாங்காங்கை 256 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றது இந்தியா.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் நேற்று ஹாங்காங்கை இந்தியா சந்தித்தது. டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
கம்பீரும், ஷேவாக்கும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு பிரமாதமான தொடக்கத்ைதக் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து ஹாங்காங் பந்து வீச்சை தவிடுபொடியாக்கி ரன்களைக் குவித்தனர்.
ஷேவாக் 27 பந்துகளில் அரை சதத்ைத கடந்து தொடர்ந்து அதிரடியாக ஆடினார். இறுதியில், 44 பந்துகளில் 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் ஷேவாக்.
கம்பீரும்,ஷேவாக்கும் சேர்ந்து 127 ரன்களைக் குவித்னர். பின்னர் கம்பீர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த டோணியும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து இந்தியாவின் ரன் குவிப்பை வேகப்படுத்தினர். ரெய்னா அதிரடியாக இருந்தார். டோணி சற்றே அடக்கி வாசித்தார்.
இருவரும் சேர்ந்து அடித்து ஆட ஆரம்பித்ததால் ஹாங்காங் பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்து போய் விட்டனர். படு வேகமாக ஆடிய ரெய்னா சதம் அடித்தார். 101 ரன்களை சேர்த்த அவர் அதற்காக எடுத்த பந்துகள் 68.
பின்னர் உத்தப்பா, டோணியுடன் இணைந்தார். டோணி தொடர்ந்து சிறப்பாக ஆடி 109 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தப்பா தன் பங்குக்கு ஆட்டமிழக்காமல் 15 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில், இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 374 ரன்களைக் குவித்தது. ஆசிய கோப்பைப் போட்டிகளில் இதுவரை இருந்து வந்த சாதனையை முறியடித்த ஸ்கோர் ஆகும் இது. இதற்கு முன்பு இதே ஹாங்காங்குக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்திருந்த 343 ரன்கள் என்ற ஸ்கோர்தான் சாதனையாக இருந்து வந்தது.
பின்னர் ஆடிய ஹாங்காங்கால் இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால் 36.5 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து அது ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் பியூஷ் சாவ்லா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷேவாக் 2 விக்கெட் சாய்த்தார்.
சிறப்பாக ஆடி சதம் அடித்த சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை, இலங்கை 131 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் சங்கக்காரா சதம் அடித்தார்.
பாகிஸ்தானுடன் இன்று மோதல்:
இன்றைய லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது. இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன.