இபோக்: மலேசியாவில் 6 நாடுகள் பங்கேற்றுள்ள அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரிய அணிகளிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் இருந்தே ஆக்ரோஷத்துடன் ஆடியது. முதல்பாதியில் 2-1 என்ற முன்னிலை பெற்ற இந்தியா, 2-வது பாதியிலும் பாகிஸ்தான் வீரர்களை மிரட்டியது. இதனால் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ரூபிந்தர் பால் சிங், அக்சய் தீப் சிங், மன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதன்மூலம் அஸ்லான் ஷா தொடரில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன் சர்வதேச ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 52-வது முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டும் அஸ்லான் ஷா போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கோல்கள் அடிப்படையில் இந்தியாவைவிட பின்தங்கியுள்ளது.