கராச்சி: ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா படு தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று நடைபெறும் இலங்கையுடனான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
9-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் கராச்சியில் நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. உடல் நலக்குறைவால் பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக் கடைசி நேரத்தில் இடம் பெறவில்லை.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி கவுதம் கம்பீரும், வீரேந்திர ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இரண்டு பேரும் அதிரடியாக இன்னிங்சை தொடங்கி உற்சாகப்படுத்தினர்.
தன்விர் சொஹைல் பந்து வீச்சை இருவரும் சிதறடித்தார்கள். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
88 ரன்களை ஸ்கோர் எட்டிய போது கம்பீர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். கம்பீர் வெளியேறிய அடுத்த ஓவரில் ஷேவாக்கும் 49 ரன்களில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து ரெய்னா 1 ரன்னில் வீழ்ந்தார்.
இதனால் இந்தியா தடுமாறியது. இருப்பினும் 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய யுவராஜ்சிங் அதிரடியை விடவில்லை. ஸ்கோர் 129 ரன்களாக உயர்ந்த போது, யுவராஜ்சிங் 37 ரன்கள் கீப்பர் சர்ப்ராசிடம் கேட்ச் ஆனார்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் டோனியும், ரோகித் ஷர்மாவும் பொறுப்பை உணர்ந்து ஆடினார்கள். அடித்து ஆடுவதை கைவிட்டு விட்டு ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுத்தனர். இதனால் இந்தியாவின் சரிவு தடுத்து நிறுத்தப்பட்டது.
இரண்டு பேரும் அடுத்தடுத்த பந்துகளில் தங்களது அரை சதத்தை கடந்தனர். 5-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி ஸ்கோர் 241 ரன்களை தொட்ட போது பிரிந்தது.
ரோகித் சர்மா 58 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து வந்த யூசுப் பதான் 4 டக்-அவுட் ஆனார்.
அண்ணன் பதான் கைவிட்டாலும் தம்பி இர்பான் பதான் கை கொடுத்தார். சிறப்பாக ஆடினார். இந்த நிலையில், பொறுப்புடன் ஆடி வந்த கேப்டன் டோனி 49-வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 96 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 76 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய இர்பான் பதானின் உதவியால் இந்தியா 300 ரன்களை கடந்தது.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. இர்பான் பதான் 25 பந்துகளில் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் ஆட ஆரம்பித்தது. சல்மான்பட்டும், நசிர் ஜாம்ஷெட்டும் அதிரடியாக 65 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். சல்மான் பட் 36 ரன்களில் ரன்-அவுட் ஆனார். அடுத்து யூனிஸ்கான் களம் இறங்கினார்.
மறு முனையில், நசிர் ஜாம்ஷெட் 53 ரன்களில் தசைப்பிடிப்பால் ஓய்வு பெற்று வெளியேறினார்.
இதன் பின்னர் ஆட வந்த முகமது யூசுப் 20 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், அடுத்து இறங்கிய கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூனிஸ்கான்-மிஸ்பா ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் டோனி எடுத்துக் கொண்ட முயற்சிக்கு இறுதி வரை பலன் இல்லை.
இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். இறுதியில், பாகிஸ்தான் 45.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யூனிஸ்கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதேசமயம், இந்தியாவின் நிலை கஷ்டமாகியுள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, நேற்று பாகிஸ்தானிடம் வீழ்ந்து விட்டது. எனவே இன்று நடைபெறும் இலங்கையுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
தற்போது புள்ளிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. இந்த அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்ைத வீழ்த்தியுள்ளது.
வங்கதேசம் போட்டியை விட்டு வெளியேறி விட்டது.
இந்தியா இன்றைய போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். இல்லாவிட்டால் பாகிஸ்தான் நுழைந்து விடும்.