
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா கலந்து கொள்ளும் முதல் போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நெதர்லாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இதற்காக இந்திய ஹாக்கி அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியின் முக்கிய வீரர்களான இக்னேஸ் திர்கே, சர்தரா சிங் ஆகிய 2 வீரர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்திய அணியில் பின்களத்தில் ஆடும் வீரரான இக்னேஸ் திர்கேவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நடுகளத்தில் ஆடும் சர்தரா சிங்கிற்கு, முழங்கால் எலும்பில் காயம் அடைந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2 வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் குணமாகி போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணியின் 2 முக்கிய வீரர்கள் காயமடைந்து உள்ளனர். இதனால் அணிக்கு இது ஒரு மோசமான நேரம் என்று நினைகிறேன். இருப்பினும் காயத்தில் இருந்து 2 வீரர்களும் விரைவாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சர்தராவை பொறுத்தவரை அவர் மிகவும் துரதிஷ்டசாலியாக உள்ளார். ஸ்பெயின் சுற்றுப்பயணத்தின் போது, காயமடைந்த அவர் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போனது. அதேபோல ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகளில் இக்னேஸ் காயம் காரணமாக விளையாடவில்லை என்றார்.