
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றது. இதில் பி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, அந்த பிரிவில் உள்ள நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் தென் கொரியா என்று 4 அணிகளிடம் வரிசையாக தோல்வி அடைந்தது.
இதையடுத்து நேற்று கடைசி லீக் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணியுடன் மோதியது. பதக்கம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும், ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டியின் 15வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஜெரோம் முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் கோல் அடிக்க தவறிய இந்திய அணி 2வது பாதியிலும் சொதப்பியது.
அதன்பிறகு 47வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெளதியர் போக்கார் ஒரு கோலை அடித்தார். 67வது நிமிடத்தில் தாம் பூன் 3வது கோலை அடிக்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. போட்டியில் கடைசி வரை கோல் அடிக்க முயன்ற இந்திய அணியின் முயற்சிகள் வீணானது. கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளையும் இந்திய அணியினர் வீணடித்தனர்.
இதனால் போட்டியின் முடிவில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 5 லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் 11ம் தேதி நடக்கும் 11, 12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.