
லணடன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் 'பி' பிரிவை சேர்ந்த இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. ஏற்கனவே 2 தோல்விகளை பெற்ற இந்திய அணி, நேற்றைய போட்டியில் கட்டாய வெற்றியை முன்னிறுத்தி விளையாடியது.
ஆனால் ஒலிம்பிக் நடப்பு சாம்பியனான ஜெர்மனியினர் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினர். போட்டியின் 7வது நிமிடத்தில் ஜெர்மனியின் புளேரியன் பக்ஸ் முதல் கோலை அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே இந்தியாவிற்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும், இதை கோலாக மாற்ற முடியவில்லை.
அதன்பிறகு 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்திய இந்திய வீரர் ரகுநாத் ஒரு கோலை அடித்தார். ஆனால் 16வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் புளேரியன் பக்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து, அந்த அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.
24வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஆலிவர் கார்ன் ஒரு கோலை அடித்தார். 34வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் வெஸ்லே ஒரு கோல் அடித்தார். 36வது நிமிடத்தில் புளேரியன் பக்ஸ் மீண்டும் ஒரு கோலை அடித்தார்.
இந்த நிலையில் போட்டியின் 2வது பாதியில் இந்தியா கோல் அடித்து சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 43, 48 மற்றும் 58 நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோட்டைவிட்ட இந்திய அணிக்கு, 62வது நிமிடத்தில் துஷார் கண்டேகர் ஒரு ஆறுதல் கோலை அடித்து கொடுத்தார்.
இதனால் போட்டியின் முடிவில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அடுத்த சுற்றிற்கு நுழையும் தகுதியை இந்திய அணி இழந்தது. மேலும் 'ஹாட்ரிக்' தோல்விகளை தழுவிய இந்திய அணியின் ஒலிம்பிக் பதக்க கனவும் கலைந்தது.