
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய ஹாக்கி அணி தகுதிப் பெற்றதை பாராட்டி, ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 லட்சம் வீதமும், அணியின் பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஹாக்கி சங்கம் அறிவித்தது.
இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நேப்ஸ், அணி வீரர்களுக்கும், பணியாளர்களும் ஆப்பிள் ஐபேட் அளிக்குமாறு, இந்திய ஹாக்கி சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையில் ஆப்பிள் ஐபேட் வாங்கப்பட்டது போக, மீதமுள்ள தொகை மட்டும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஐபேட் மூலம் தற்போது பயிற்சி அளிப்பது எளிதாகி உள்ளதாக, பயிற்சியாளர் மைக்கேல் நேப்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐபேட்டில் போட்டிகளின் வீடியோக்கள், அறிவிப்புகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் ரிப்ளே போட்டு பார்த்து வீரர்களின் சாதகம் மற்றும் பாதகமான விஷங்களை கண்டறிய முடியும். ஐபேட் முறை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிமையாக உள்ளது என்றார்.
இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கான கூட்டத்தில் முக்கியமான ஹாக்கி போட்டிகளின் காட்சிகளை பதிவு செய்து கொண்டு வரும் பயிற்சியாளர் மைக்கேல், தனது ஐபேட்டில் இருந்து வீரர்களின் ஐபேட்டிற்கு இணைத்து எளிமையான முறையில் விளக்குகிறார்.
மேலும் பயிற்சியின் போது நடைபெறும் நிகழ்ச்சிகளை பயிற்சியாளர் தனது ஐபேட்டில் உள்ள கேமரா மூலம் படம் பிடித்து கொண்டு கொள்கிறார். இதனால் ஒரே முறையை மீண்டும் மீண்டும் செய்து காட்ட வேண்டியது தவிர்க்கப்படுகிறது.
ஹாக்கி பயிற்சிக்காக நவீன முறைகளை பயன்படுத்தி ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தர பயிற்சியாளார் மைக்கேல் கடுமையாக போராடி வருகிறார். இதை உணர்ந்து இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.