டெல்லி: டெல்லியில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றின் லீக் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் நேற்று வெற்றி பெற்றன. இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் வெற்றிப் பெற்றால், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள அணிகளை தேர்வு செய்யும் தகுதி சுற்று போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டிகளில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றிப் பெற்றன.
பெண்கள் அணி:
ஒலிம்பிக் தகுதி சுற்றின் பெண்கள் பிரிவில் நேற்று கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாய சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது. ஆனால் இத்தாலி டிரா செய்தால் கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா அணி 9, 17, 29 ஆகிய நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தவறிவி்ட்டது. இதனால் முதல் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்ததன.
ஆனால் ஆட்டத்தின் 2வது பாதியில் இத்தாலிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, இந்திய வீராங்கனைகள் தடுத்து நிறுத்தனர். இந்த நிலையில் 54வது நிமிடத்தில் இந்தியாவிற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஜஸ்ஜீத், ரிது ராணியிடம் பாஸ் செய்து கோல் அடிக்க உதவினார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னேறியது.
ஆட்டநேர இறுதியில் இத்தாலி கோல் எதுவும் அடிக்கவில்லை என்பதால், 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, நாளை தென் ஆப்பிரிக்காவை எதிர் கொள்கின்றது. இதில் வெற்றி பெற்றால், இந்திய பெண்கள் ஹாக்கி அணி, லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெறும்.
ஆண்கள் அணி:
ஆண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா, போலாந்து அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 13வது நிமிடத்தில் போலாந்துக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார் தாமஸ். அதற்கு பதிலடியாக 26வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் மூலம் சந்தீப் சிங் கோல் அடித்தார்.
போட்டியின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் 2வது பாதியில் இந்தியாவின் சிவேந்திர சிங் 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அடுத்த 4 நிமிடங்களில் போலாந்தின் மிராஸ்லாவ் ஒரு கோல் அடித்தார்.
இரு அணிகளும் கடுமையான போராடி வரும் நிலையில், இந்தியாவின் ரகுநாத் 65வது நிமிடத்தில் ஒரு கோலும், சந்தீப் சிங் 70வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து, பரபரப்பை அடக்கினார். ஆட்ட முடிவி்ல் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.இதன்மூலம் நாளைய இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா தகுதிப் பெற்றது. நாளை பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியி்ல் இந்தியா வெற்றிப் பெறும் நிலையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிப் பெறும்.