கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த ஹாக்கி தொடரில் பெங்களூர் அணியை வீழ்த்தி தென்னக ரயில்வே அணி கோப்பை வென்றது.கோவில்பட்டியில் கேஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமியம்மாள் நினைவு ஹாக்கி போட்டி கடந்த 24ம் தேதி தொடங்கியது. கேஆர் நகர் லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டிகளில் பெங்களூர், கர்நாடக, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட அணிகள் பங்கு பெற்றனர்.நேற்று மாலையில் நடந்த இறுதி போட்டியில் சென்னை தென்னக ரயில்வே அணியும், பெங்களூர் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் தென்னக ரயில்வே வீரர் மகேந்திரசிங் ஒரு கோலும், 28வது நிமிடத்தில் இதே அணியை சேர்ந்த திவாகர் ஒரு கோலும் போட்டு அசத்தினர். இதனால் முதல் பாதியில் தென்னக ரயில்வே 2-0 என்ற முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் 46 நிமிடத்தில் பெங்களூர் வீரர் தினேஷ் டர்க்கி ஒரு கோல் போட்டார். ஆட்ட நேர முடிவில் பெங்களூர் வீரர்கள் கோல் போட எடுத்த தீவிர முயற்சிகள் பலிக்கவில்லை. இதையடுத்து தென்னக ரயில்வே 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, கோப்பையை தட்டி சென்றது.