புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரில், இந்திய அணியுடன் நடந்த அரை இறுதியில் வெற்றி பெற்ற பிறகு ரசிகர்களை நோக்கி ஆபாசமாக சைகை செய்து அநாகரிகமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவுடன் நடந்த விறுவிறுப்பான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள், சட்டையை கழற்றி ஆர்ப்பரித்ததுடன் ரசிகர்களை நோக்கி ஆபாசமாக சைகை செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தவறு செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியாவில் சர்வதேச ஹாக்கி போட்டிகளை நடத்த மாட்டோம் என ஹாக்கி இந்தியா நிர்வாகம் அறிவித்தது.
சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, பாகிஸ்தான் வீரர்கள் முகமது தவுசிக், ரிசர்வ் கோல் கீப்பர் அலி அம்ஜத் இருவருக்கும் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது. இதனால் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டியில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஷப்கத் ரசூல் என்ற வீரர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பாகிஸ்தான் ஹாக்கி சங்கமும் தங்கள் வீரர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளது.