சீனா: 2025 மகளிருக்கான ஆசிய கோப்பை லீக் சுற்றில் இந்திய மகளிர் அணி தோல்வியின்றி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சீனாவின் ஹாங்சூவில் நடைபெற்ற இந்த தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரை 12-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி பந்தாடியது. இதற்கு முன்,காலை தாய்லாந்தை ஜப்பான் அணி 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இந்தியாவின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்திருந்தது.ஆட்டத்தில், இந்திய அணி வலுவான தொடக்கத்தை அளித்தது. மும்தாஸ் ஆட்டத்தின் 70-வது வினாடியில் முதல் கோலை அடித்து இந்தியாவை 1-0 என முன்னிலைப்படுத்தினார். 11-வது நிமிடத்தில் அணித் தலைவர் சலிமா டெடே இரண்டாவது கோலை அடித்தார்.

பின்னர் 13-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி மூன்றாவது கோலை பதிவு செய்தார். 14-வது நிமிடத்தில் நவ்நீத் ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்ற, ஆட்டத்தின் முதல் பகுதி முடிவில் இந்தியா 4-0 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பகுதியில் சிங்கப்பூர் ஆக்ரோஷமாக தொடங்கி, 16வது நிமிடத்தில் முதல் பெனால்டி கார்னரை பெற்றது.
ஆனால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இந்தியா தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, 20-வது நிமிடத்தில் நவ்நீத் மற்றொரு கோலை அடித்து 5-0 என ஆக்கினார். 28-வது நிமிடத்தில் வைஷ்ணவி விட்டல் பால்கே இந்தத் தொடரில் தனது முதல் கோலைப் பதிவு செய்து முன்னிலையை 6-0 ஆக உயர்த்தினார்.
ஒரு நிமிடம் கழித்து, உதிதா ஒரு பெனால்டி கார்னரை கோலாக்க, இரண்டாவது பகுதி முடிவில் இந்தியா 7-0 என முன்னிலை வகித்தது.மூன்றாவது பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. 32-வது நிமிடத்தில் மும்தாஸ் தனது இரண்டாவது கோலை அடித்து 8-0 ஆக உயர்த்தினார். 38-வது நிமிடத்தில் நேஹா தனது முதல் கோலை பதிவு செய்தார்.
பின்னர் ஒரு நிமிடம் கழித்து மும்தாஸ் தனது ஹாட்ரிக் கோலை முடித்தார். காலாண்டு முடிவதற்கு 24 வினாடிகள் மீதமிருக்க, ஷர்மிளா தனது முதல் கோலை அடித்து இந்தியாவை 11-0 என்ற முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.நான்காவது மற்றும் இறுதி பகுதியில் சிங்கப்பூர் இந்தியாவின் கோல் கணக்கை உயர்த்தாமல் தடுக்க முழு முயற்சியையும் மேற்கொண்டு, பெனால்டி கார்னர்களை தொடர்ந்து தடுத்தது.
இருப்பினும், 53-வது நிமிடத்தில் வைஷ்ணவி விட்டல் பால்கே தனது இரண்டாவது கோலை அடித்து, இந்தியாவின் 12-வது கோலைப் பதிவு செய்தார். அதன் பிறகு எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை, இந்தியா 12-0 என்ற பெரிய வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தது.இந்தியா இப்போது தனது சூப்பர் 4 பயணத்தை செப்டம்பர் 10, புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளது.