டெல்லி: ஹாக்கி இந்தியா அமைப்பு ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ. 50,000 தருவதாக கூறியுள்ளதை இந்திய ஹாக்கி அணியின் வீராங்கனைகள் நிராகரித்துள்ளனர். ஆடவர் அணிக்கு தரப்படுவதைப் போன்ற சம்பளமே தங்களுக்கும் தர வேண்டும் என அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
மேலும், சம்பளம் தரப்படாமல் உள்ளதைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆடவர் ஹாக்கி அணியைத் தொடர்ந்து தற்போது மகளிர் ஹாக்கி அணியினரும் புரட்சியில் இறங்கியுள்ளனர். தங்களுக்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆடவர் அணிக்கு இணையான சம்பளம் தர வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதையடுத்து ஹாக்கி இந்தியா அமைப்பு ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ. 50,000 தருவதாகவும், அதைப் பெற்றுக் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் கோரியது.
ஆனால் இதை ஹாக்கி அணியினர் நிராகரித்துள்ளனர். இந்தத் தொகை மிகவும் சிறியது. ஆடவர் அணிக்கு என்ன மாதிரியான தொகை தரப்பட்டதோ, அதே அளவிலான தொகை எங்களுக்கும் தரப்பட வேண்டும். அதுவரை போராட்டத்தை விட மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
மேலும் தற்போது போபாலில் நடந்து வரும் தேசிய அளவிலான பயிற்சி முகாமிலும் கையில் கருப்புப் பட்டை அணிந்தபடி வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.