கதறி அழுத இந்திய ஹாக்கி வீராங்கனைகள்.. ஹாக்கி உலகக் கோப்பையில் வெளியேற்றம்.. ஆஸ்திரேலியாவுடன் டிரா
ஆம்ஸ்டெல்வீன்: நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை 0-0 என டிரா செய்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளது. இந்தப் போட்டி முடிந்த உடன் இந்திய வீராங்கனைகள் பலரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி உருக்கமாக அமைந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெற இந்திய அணிக்கு வெற்றி கட்டாயமாக இருந்தது. அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு டிரா செய்தாலே போதுமானதாக இருந்தது. முன்னதாக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 4-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு நீடித்தது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

இந்தப் போட்டியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. மேலும் கோல் வித்தியாசமும் -2 என்ற கணக்கில் சமமாக இருந்தது. ஆனால், இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி 3 கோல்களும், இந்திய அணி 2 கோல்களும் அடித்திருந்தன. இதன் அடிப்படையில் அதிக கோல்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியதில்லை. இந்தியாவின் அந்த நீண்ட காலக் கனவு மீண்டும் கலைந்தது.
கடந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மேஜிக்கை இந்தியாவால் மீண்டும் நிகழ்த்த முடியாமல் போனது. இந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலியா அடித்த இரண்டு கோல்கள், இந்தியாவின் அப்பீல் மூலம் ஆபத்தான ஆட்டம் என நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் இஷிகா சவுத்ரிக்கு தலையிலும், லால்ரெம்சியாமிக்கு முழங்காலிலும் காயம் ஏற்பட்டது பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும் பல்ஜீத் கிரீன் கார்டு பெற்று வெளியேறியதால் இந்தியா சிறிது நேரம் 10 வீராங்கனைகளுடன் விளையாடியது. ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய வீராங்கனை சலிமா டெட்டே தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார்.
இந்திய அணியின் கோல்கீப்பர்களான சவிதா புனியா மற்றும் பிச்சு தேவி ஆஸ்திரேலியாவின் பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினர். ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்களில் பிச்சு தேவிக்கு பதிலாக கூடுதல் அவுட்ஃபீல்ட் வீராங்கனையை களம் இறக்கி இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மரினே அதிரடி காட்டினார். எனினும் இந்திய வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி முடிந்ததும் சவிதா புனியா மற்றும் பிச்சு தேவி உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications
