அகமதாபாத்: புரோ கபடி சீசன் 5 போட்டிகளில், ஜோன்களுக்கு இடையேயான போட்டிகள் நேற்று துவங்கின. இதில், பரபரப்பான ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியை, 27-24 புள்ளிக் கணக்கில் வென்றது குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி.
புரோ கபடி சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 12 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மொத்தம், 13 வாரங்கள் நடக்கும் இந்தப் போட்டி, இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகளும், தலா 6 அணிகள் என, இரண்டு ஜோன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதுவரை, ஜோன்களுக்குள் உள்ள அணிகளுக்கு இடையே போட்டி நடந்து வந்தது.
ஜோன்களுக்கு இடையேயான போட்டிகள், நேற்று துவங்கின.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், முதல்கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள, ஜோன் ஏ-யில் உள்ள குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியும், ஜோன் பி-யில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 14 - 9 என்ற புள்ளிகளுடன், முதல் பாதியில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, பெங்களூரு அணி புள்ளிகளை சேர்க்க, அந்த போட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில், குஜராத் அணியும் புள்ளிகளை சேர்த்து வந்தது.
பெங்களூரு அணிதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தாண்டியா ஆடிய குஜராத் அணி, 27-24 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இதன் மூலம், 6 போட்டிகளில், 4 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா உடன், 23 புள்ளிகளுடன், குஜராத் அணி தொடர்ந்து, முன்னிலையில் உள்ளது. பெங்களுர் அணி, 7 போட்டிகளில், தலா, 3ல் வெற்றி, தோல்வி மற்றும் ஒரு டிராவுடன், 20 புள்ளிகளைப் பெற்று, ஜோன் பி-யில் முதலிடத்தில் உள்ளது.