மூத்த கபடி வீரர் அனூப் குமார் ஓய்வை அறிவித்தார்.. இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர்
டெல்லி : இந்திய கபடி அணியில் சிறந்த வீரராக வலம் வந்த அனூப் குமார் தன் ஓய்வு முடிவை கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
35 வயதான அனூப் குமார் தன் 15 ஆண்டு கால கபடி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்திய கபடியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். இந்தியாவிற்கு கபடியில் பல வெற்றிகளை பெற்றுத் தந்த அணிகளில் இடம் பெற்றவர். கேப்டனாகவும் செயல்பட்டு கபடி உலகக்கோப்பையில் வெற்றி பெற்றுக் கொடுத்தவர்.

பெற்ற வெற்றிகள்
அனூப் குமார் அர்ஜுனா விருது வென்ற சிறந்த கபடி வீரர். தெற்காசிய விளையாட்டுத் தொடரில் 2006ஆம் ஆண்டில் தன் சர்வதேச கபடி பயணத்தை துவக்கினார். கபடி அணி கேப்டனாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார்.

பெரிய சாதனை
மிகப் பெரிய சாதனை என்றால் அது 2016 கபடி உலகக்கோப்பையில் அணியை தலைமை ஏற்று வழிநடத்திச் சென்று வெற்றி பெற வைத்தது தான். அதே போல புரோ கபடி லீகின் இரண்டாம் சீசனில் யு மும்பா அணிக்கு தலைமை ஏற்று கோப்பை வென்று கொடுத்தார்.

முழுமையான கனவுகள்
ஒரு பொழுது போக்குக்காக கபடி ஆடத் துவங்கிய அனூப் குமார், பின்னர் அதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார். இந்திய அணிக்கு ஆட வேண்டும். தங்கம் வெல்ல வேண்டும் என்ற தன் கனவுகளை பூர்த்தியாக்கிய மகிழ்ச்சியோடு கபடி அரங்கில் இருந்து விடை பெற்றுக் கொண்டுள்ளார்.

கபடியின் வளர்ச்சி
தான் மகனின் 10வது பிறந்த நாள் அன்று தான் ஓய்வு பெற்று இருப்பதால் இது இன்னும் மறக்க முடியாத தருணமாக மாறி உள்ளதாக தெரிவித்த அனூப் குமார், புரோ கபடி லீக் தொடரால் கபடி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications