உலககோப்பை கபடி: அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா 'ஹாட்ரிக் வெற்றி'
ஆமதாபாத்: உலககோப்பை கபடியின் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 74-20 என்ற புள்ளிகள் கணக்கில் எளிதாக வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியுள்ளது இந்தியா.
3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்கொரியா, வங்காள தேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 32-34 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது ஆட்டத்தில் 54-20 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும், 3-வது போட்டியில் 57-20 என்ற கணக்கில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.
இந்திய அணி 4வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவை நேற்று எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் எதிரணியை திக்குமுக்காடச் செய்தனர். இறுதியில் 74-20 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றியால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
தொடர்ந்து உலககோப்பை கபடியில் முத்திரை பதித்து வரும் இந்தியா இந்த முறையும் கோப்பை வெல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications