மேளகா : 2019 உலகக்கோப்பை கபடித் தொடர் மலேசியாவில் ஜூலை 20 முதல் ஜூலை 28 வரை நடந்து முடிந்தது.
உலக அளவில் அதிக கபடி ரசிகர்கள் கொண்ட இந்தியா மற்றும் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தொலைக்காட்சி வாயிலாக ஒருவர் கூட உலகக்கோப்பை கபடித் தொடரை பார்க்கவில்லை.
இதன் பின்னணி குறித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளில் உலகக்கோப்பை கபடித் தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்று இருந்தது சோனி பிச்சர்ஸ் நிறுவனம்.
ஆனால், உலகக்கோப்பை தொடரின் போது ஒரு போட்டியை கூட ஒளிபரப்பவில்லை. இது குறித்து சோனி நிறுவனத்தின் இந்திய பிரிவில் கேட்டால், உலகக்கோப்பை தொடரை ஏற்று நடத்திய மலேசிய கபடி அமைப்பை கை காட்டுகிறார்கள்.
உலகக்கோப்பை கபடித் தொடரை முன் நின்று நடத்திய மலேசியா கபடி கூட்டமைப்புக்கும், மலேசிய கபடி அமைப்பு எனும் போட்டி அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, போட்டிகளை படம் பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா மட்டுமின்றி எங்கேயும் 2019 உலகக்கோப்பை கபடிப் போட்டிகள் ஒளிபரப்பப் படவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் 32 ஆடவர் அணிகளும், 16 மகளிர் அணிகளும் மோதின. இரண்டு பிரிவிலும் இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது. ஆனால், அதை யாராலும் நேரலையில் பார்த்து ரசிக்க முடியவில்லை.
உலகக்கோப்பை போட்டிக்கு தான் இந்த கதி. இந்த உலகக்கோப்பை தொடர் நடந்த அதே காலத்தில், இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கபடித் தொடரான புரோ கபடி லீக் மிகவும் வெற்றிகரமாக நடந்தது.
இந்த ஒளிபரப்பு சர்ச்சைகளால் மலேசியாவுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முக்கியமான விளையாட்டுத் தொடர்கள் நடக்க வேண்டி இருந்தால், அதிலும் இது போன்ற சிக்கல்கள் எழுமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இயல்பாக ஏற்படும். இனியாவது இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதை அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டும்.