ஹாங்சோ: ஆசிய போட்டிகள் ஆடவர் கபடி இறுதிப்போட்டியில் இந்தியா - ஈரான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின் சில மணி நேரங்களுங்களுக்கு பின் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது.
ஆசிய போட்டிகளின் 14வது நாள் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே இந்திய வீரர்கள் வில்வித்தை, மகளிர் கபடி உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார்கள். இதன் மூலம் ஆசிய போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதுவரை மொத்தமாக 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என்று 100 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த நிலையில் ஆடவர் கபடி பிரிவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஈரான் அணி களமிறங்கியது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
முதல் பாதி ஆட்டம் முடிவில் 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இதன்பின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 24-19 என்ற முன்னிலையில் பெற்றிருந்த நிலையில், திடீரென ஈரான் அணி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 25-25 என்ற நிலைக்கு கொண்டு வந்தது. இதன்பின் கடைசி 2 நிமிடங்கள் இருந்த போது, 28-28 என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது இந்தியாவுக்கு டூ ஆர் டை ரெய்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்தியா தரப்பில் பவன் ரெய்டு சென்ற போது, ஈரான் வீரர்கள் சுற்றி வளைத்தனர். இதனை உணர்ந்த பவன், ஈரான் வீரர்களை நெருங்கி வரவைத்து எல்லை கோட்டில் இருந்து வெளியேறினார். ஈரான் வீரர்கள் பிடிப்பதற்கு முன்பாக பவன் வெளியேறினார். இதனை இந்தியா சார்பாக ரிவ்யூ கேட்கப்பட்டது.
அப்போது நடுவர்கள் சார்பாக இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால் பழைய விதிகளின்படி இந்தியாவுக்கு 4 புள்ளிகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் புதிய விதிகளின் படி ஒரு புள்ளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் இந்திய அணி தரப்பில் 4 புள்ளிகள் கோரப்பட்டது. ஆனால் இதற்கு ஈரான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, விவகாரம் சர்ச்சையானது.
போட்டியில் இருந்த 3 நடுவர்களையும் சுற்றி சுற்றி வந்து இரு அணி வீரர்களும் விவாதிக்க தொடங்கினார்கள். இவர்களுடன் பயிற்சியாளர்களும் சேர்ந்துகொள்ள விவகாரம் சர்ச்சையாகியது. இதன்பின் நடுவர்கள் ஒரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை வழங்கினார்கள். ஆனாலும் தொடர்ந்து பயிற்சியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆட்டம் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின் சில மணி நேரங்களுக்கு பின் கபடி போட்டி மீண்டும் தொடங்கியது. சர்வதேச விதிகளின் படி பழைய விதியே பின்பற்றப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 3 புள்ளிகளும், ஈரான் அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஆட்டத்தில் 31-29 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் கைகள் ஓங்கியது. இறுதியாக 33-29 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி தங்கத்தை வென்று அசத்தியது.