டெல்லி: புரோ கபடி லீக் வரலாற்றிலேயே ரூ.1.51 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக மோனு கோயத் உள்ளார். கிரிக்கெட்டைத் தவிர்த்த மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போதும், இது அதிகம்தான்.
புரோ கபடி லீக் போட்டி 6வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. இதில், ரைடரான மோனு கோயத்தை ரூ.1.51 கோடிக்கு, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலம் எடுத்தது. புரோ கபடி லீக் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரானார்.
கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போதும், இது புதிய சாதனைதான். இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியை, இந்தியன் சூப்பர் லீக்கில் பெங்களூரு அணி ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. புரோ மல்யுத்த லீகில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார், ரூ.55 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். பிரீமியர் பாட்மின்டன் லீகில், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி, எச்.எஸ். பிரனாயை மிகவும் அதிகபட்சமாக ரூ.62 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
அதே நேரத்தில், இந்த நிலைக்கு வருவதற்கு மோனு கோயத் மிகப் பெரிய தடைகளை தாண்டி வர வேண்டியிருந்தது. சர்வீசஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். முதல் மூன்று புரோ கபடி லீக் சீசனில் விளையாடுவதற்கு அவருக்கு சர்வீசஸ் அனுமதி தரவில்லை. நான்காவது சீசனில், பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் மோனு மிகச் சிறப்பாக விளையாடியபோதும், பெங்கால் வாரியர்ஸ் கடைசி இடத்தையே பிடித்தது.
ஐந்தாவது சீசனில் பட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடினார். பிரதீப் நர்வால் மற்றும் மோனு இணைந்து 560 புள்ளிகளைப் பெற்றனர். பட்னா பைரேட்ஸ் மூன்றாவது முறையாக சாம்பியனானது. இருந்தாலும் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் ஈரானில் நடந்த ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.
அதனால் சோர்ந்து விடாமல் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். தேசிய கபடி சாம்பியன்ஷிப் பைனல்ஸ் மற்றும் பெடரேஷன் கோப்பை சாம்பியன்ஷிப்பை சர்வீஸஸ் வென்றது. அதன் பலன் தான், தற்போது அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.