அடுத்த சீசனுக்கு டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி தயார்... புது கோச் வந்தாச்சுல்ல!
சென்னை: கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போல, கபடிக்கு நடக்கும் புரோ கபடி லீக் சீசன் 6 வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய கோச்சாக எடச்சேரி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சாம்பியனான யு மும்பா அணியின் கோச்சாக இருந்தவர் பாஸ்கரன்.
கிரிக்கெட் போட்டிக்கு ஐபிஎல் போட்டி நடப்பது போல, கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், புரோ கபடி லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 5 சீசன்கள் நடந்துள்ளன. முதல் சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் யு மும்பா அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து மூன்று சீசன்களில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

புரோ கபடி லீக் சீசன் 6, இந்தாண்டு அக்டோபர் 19ல் துவங்குகிறது. முதல் நான்கு சீசன்களில், 8 அணிகள் விளையாடின. கடந்தாண்டு நடந்த 5வது சீசனில் தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோத்தா, குஜராத் பார்சூன் ஜயன்ட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அறிமுகமாயின. கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராம் சரண் உள்ளிட்டோர் இந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.
இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற யு மும்பா அணியின் கோச்சாக இருந்த எடச்சேரி பாஸ்கரன், தற்போது தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கபடி பயிற்சியாளராக, 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் பாஸ்கரன். தமிழ் தலைவாஸ் அணியின் கோச்சாக இதுவரை இருந்த காசிநாத பாஸ்கரன், அணியின் தொழில்நுட்ப இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications