டெல்லி : வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக்கின் முதல் போட்டியில் டபாங் டெல்லி அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் டிரா செய்தது.
டபாங் டெல்லி 48 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியின் மேராஜ் ஷேக் 15 ரெய்டு புள்ளிகளும் ரவீந்தர் பாஹல் 5 டேக்கில் புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
ஜெய்ப்பூர் அணியின் தீபக் நிவாஸ் 20 ரெய்டு புள்ளிகள் பெற்று போராடினார். எனினும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆடிய போட்டி 35-35 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தான் சிறப்பாக ஆடியது. எனினும், பாட்னா கடைசி நிமிடத்தில் புள்ளிகளை சமன் செய்து விட்டது.
இன்றைய போட்டியில் டபாங் டெல்லி அணி யு மும்பா அணியை சந்திக்கிறது. இந்த போட்டி இரவு எட்டு மணிக்கு துவங்கும்.