அஹ்மதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் அஜய் தாக்குர் கடைசி நிமிடங்களில் நடத்திய வேட்டையால், குஜராத் அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.
முன்னதாக குஜராத் அணி தன் சொந்த மண்ணில் வெற்றி பெறும் நோக்கில் ஆடியது. முந்தைய இரு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து இருந்ததால், சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்ப திட்டமிட்டது.
தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாக்குர், ராகுல் சௌதரி என இரு அதிரடி ரெய்டர்கள் இருப்பதால் அந்த அணி நம்பிக்கையுடன் களமிறங்கியது.
போட்டியின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 15 - 10 என முன்னிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி முடிவை நெருங்கிக் கொண்டு இருந்தது.
37வது நிமிடத்தில் குஜராத் அணி 26 - 25 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. குஜராத் அணி வெற்றி பெறும் என்ற எண்ணம் அப்போது இருந்தது. 38வது நிமிடத்தில் அஜய் தாக்குர் ரெய்டு சென்றார்,
அவர் ரெய்டில் மூன்று டச் பாயின்ட்கள் பெற்று வந்தார். அந்த அளவுக்கு குஜராத் அணியின் தடுப்பாட்டம் மோசமாக இருந்தது. அடுத்த இரு நிமிடங்களில் குஜராத் அணி ஆல் - அவுட் ஆனது. அதை அடுத்து புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ் 34 - 28 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணி முதன்முறையாக தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. தான் ஆடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகள், மூன்று தோல்விகள் பெற்றுள்ளது குஜராத் அணி.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் டபாங் டெல்லி அணி 32 - 30 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.