கவனமாக.. நிதானமாக ஆடிய ஜெய்ப்பூர் - குஜராத்.. கடைசி 4 நிமிடங்களில் நடந்த மாற்றம்!
அஹ்மதாபாத் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் இடையே ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளும் மிகவும் குறைந்த புள்ளிகள் மட்டுமே எடுத்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டே சென்றதால் பெரும் பரபரப்பு நீடித்தது.
கடைசி நான்கு நிமிடங்களில் தான் போட்டி ஜெய்ப்பூர் பக்கம் சாய்ந்தது. அப்போதும் புள்ளி வித்தியாசம் குறைவாகவே இருந்ததால் கடைசி நிமிடம் வரை இருக்கை நுனியில் அமர்ந்து இருந்தனர் ரசிகர்கள்.
முதல் பாதியில் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்தன. புள்ளிகள் பெறுவதை விட, இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தின. அதன் காரணமாக முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10 - 9 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில் குஜராத் அணியை விட முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியிலும் இதே கவனம் இரு அணிகளிடமும் தொடர்ந்தது. கடைசி நான்கு நிமிடங்கள் இருக்கும் போது இரு அணிகளும் 17 - 17 என்ற புள்ளிக் கணக்கில் சம நிலையில் இருந்தன.
அதன் பின் பதட்டப்படாமல் இருந்த ஜெய்ப்பூர் அணி, மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடங்களில் அதை தக்க வைத்துக் கொண்டே வந்தது. இறுதியில் 22 - 19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது
குஜராத் அணி கடந்த சில போட்டிகளாக தோல்விகளை சந்தித்து வருவதால் அதை மாற்ற வேண்டி தடுப்பாட்டத்தில் கவனமாக ஆடியது. ஆனால், ஜெய்ப்பூர் அணி, எதிரியின் செயல்பாட்டை கணித்து அதனால் கவனமுடன் ஆடியது. அதுவே, அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியின் வெற்றியை அடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. ஜெய்ப்பூர் இதுவரை ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. குஜராத் அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று ஒன்பதாம் இடத்தில் உள்ளது.