மும்பை : 2023 புரோ கபடி லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் யு மும்பா அணி கடைசி வரை யுபி யுத்தாஸ் முன்னிலை பெற விடாமல் கதற வைத்து வெற்றி பெற்றது.
யு மும்பா - யுபி யுத்தாஸ் அணிகள் இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் துவக்கம் முதலே புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருந்தது. அதே போல, யுபி யுத்தாஸ் அணியை முதலில் ஆல் - அவுட் செய்து கெத்து காண்பித்தது மும்பா அணி.

குறிப்பாக யு மும்பா அணியின் சுரேந்தர் கில், ரிங்கு தடுப்பாட்டத்தில் கில்லியாக இருந்தனர். அவர்களை தாண்டி தான் யுபி யுத்தாஸ் புள்ளிகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. இதை அடுத்து போட்டியில் பாதி நேரத்தில் மும்பா அணி 19 - 14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் வேகம் எடுத்த யுபி யுத்தாஸ் மும்பா அணியை ஆல் - அவுட் செய்தது. அப்போதும் கூட மும்பா அணியை விட அதிக புள்ளிகள் பெற முடியவில்லை. அப்போதும் மூன்று புள்ளிகள் வித்தியாசம் இருந்தது. கடைசி வரை இந்த வித்தியாசத்தை தக்க வைத்த யு மும்பா அணி கடைசியில் 34 - 31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
ஈரானிய வீரர் அமிர்மொஹம்மத் 10 புள்ளிகள் பெற்று தன் அறிமுக சீசனில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், யுபி யுத்தாஸ் அணி தோல்வி அடைந்தது. ரிங்கு மற்றும் சுரிந்தர் சிங் தடுப்பாட்டம் அபாரமாக இருந்ததால் யு மும்பா 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.