ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் சீசன் 12-இல் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தங்களது சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சனிக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் யுபி யோதாஸை 41-29 என்ற கணக்கில் தோற்கடித்தது. இரண்டு முறை சாம்பியனான ஜெய்ப்பூர் அணி மைதானத்தின் இரு பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நிதின் குமார் தனது அற்புதமான ஓட்டத்தைத் தொடர்ந்து சூப்பர் 10 புள்ளிகளைப் பெற்றார். அதே சமயம் அலி சமதி ஒன்பது ரெய்டு புள்ளிகளுடன் பிரமிக்க வைத்தார். ரேஸா மிர்பாகெரி நான்கு டாக்கிள்களுடன் பங்களித்தார். மேலும் தீபன்ஷு கத்ரி மற்றும் ஆர்யன் குமார் தலா மூன்று டாக்கிள்களைப் பெற்றனர்.

யுபி யோதாஸ் அணியில் ககன் கவுடா 15 புள்ளிகளுடன் தனித்து நின்றார். மேலும் கேப்டன் சுமித் சங்வான் நான்கு புள்ளிகளைச் சேர்த்தார், ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. உபி யோதாஸ் அணி ஆட்டத்தை வலுவாகத் தொடங்கி, ஷிவம் சவுதரி மற்றும் பவானி ராஜ்புத் மூலம் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது.
இருப்பினும், ஜெய்ப்பூர் விரைவாக பதிலடி கொடுத்து, சமதி மற்றும் நிதின் தலைமையில் கம்பேக் தந்தது. மிர்பாகெரியின் டாக்கிள் முதல் ஆல் அவுட்டை ஏற்படுத்தி, ஜெய்ப்பூருக்கு சாதகமாக அமைந்தது. இடைவேளைக்கு 23-12 என்ற முன்னிலையுடன் ஜெய்ப்பூர் சென்றது.
.இரண்டாவது பாதியில், உபி அணியின் கவுடா கடும் முயற்சியை எடுத்தார். மேலும் சங்வான் தற்காப்பு உறுதியைச் சேர்த்தார். ஆனால், ஜெய்ப்பூரின் தற்காப்பு உறுதியாக இருந்தது, தீபன்ஷு கத்ரியின் சூப்பர் டாக்கிள் ஜெய்ப்பூரின் முன்னிலையை அதிகரித்தது .இறுதி கட்டத்தில் பாந்தர்ஸ் வேகத்தைக் குறைத்தாலும், துல்லியமாக செயல்பட்டனர்.
இந்த சீசனில் முதல் முறையாக பத்து டாக்கிள் புள்ளிகளைப் பூர்த்தி செய்து, 41-29 என்ற கணக்கில் உறுதியான வெற்றியைப் பெற்றனர். கவுடாவின் பிந்தைய சூப்பர் ரெய்டு இருந்தபோதிலும், பிங்க் பாந்தர்ஸ் அணி சொந்த மண் ரசிகர்களுக்கு வெற்றியை பரிசாக அளித்தனர். இதன் மூலம் 3வது வெற்றியை பதிவு செய்து ஜெய்ப்பூர் அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்தது.