சென்னை: 2025 புரோ கபடி லீக் (PKL) தொடரில், தமிழ் தலைவாஸ் அணி எடுத்த ஒரு முடிவு, கபடி உலகில் பெரும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர ரைடருமான 'ஹை-ஃப்ளையர்' பவன் ஷெராவத், 'ஒழுங்குமுறை காரணங்களுக்காக' அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் என்ன தவறு செய்தார்? என கூறப்படவில்லை. இதற்கிடையே பவன் ஷெராவத் விளக்கம் அளித்துள்ளார். அவரது நீண்டகால பயிற்சியாளர் ரந்தீர் சிங்கும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். நடந்தது என்ன?
2025 புரோ கபடி லீக் சீசனுக்கு முன்னதாக, தெலுங்கு டைட்டன்ஸ் அணியிலிருந்து ₹59.5 லட்சத்திற்கு தமிழ் தலைவாஸ் அணியால் வாங்கப்பட்ட பவன் ஷெராவத், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடினார். இதில், தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடந்த பெங்கால் வாரியர்ஸ்ஸுக்கு எதிரான போட்டியில் பவன் களமிறக்கப்படவில்லை. அந்தப் போட்டியில், பவன் இல்லாமலேயே தலைவாஸ் அணி 46-36 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பெங்கால் போட்டிக்குப் பிறகு, தமிழ் தலைவாஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஒழுங்குமுறை காரணங்களுக்காக, பவன் ஷெராவத் அணியிலிருந்து மீதமுள்ள சீசனுக்கு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். அணியின் நடத்தை விதிகளை மனதில் கொண்டு, உரிய பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள பவன் ஷெராவத், இதுகுறித்து உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார். " தமிழ் தலைவாஸ் அணி என் மீது ஒழுங்கீனக் குற்றச்சாட்டை வைத்துள்ளது. நான் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்துள்ளேன், அதனால் ஒழுக்கம் என்பதன் அர்த்தம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் ஒழுங்கீனமானவன் என்றும், அணி என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளிலும் 1% உண்மை இருந்தாலும், நான் கபடி விளையாடுவதை நிறுத்திவிடுகிறேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நான் சொல்வதுதான் சரி, நான் எங்கும் தவறில்லை என்பதில் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று பவன் கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சையில், பவன் ஷெராவத்தின் நீண்டகால பயிற்சியாளரான ரந்தீர் சிங், தனது சீடனுக்கு ஆதரவாக ஆவேசமாகக் குரல் கொடுத்துள்ளார். "பவன் எனது மாணவன், இந்திய அணியின் கேப்டன். அவரை யாரும் ஒழுங்கீனமானவர் என்று சொல்ல முடியாது. நான் அவரை என் சொந்த மகனைப் போலப் பயிற்றுவித்துள்ளேன், அவனது குணம் எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு வருடம் முன்பு, யாராவது தவறு செய்தால் நான் அறைந்தால் கூட, அவன் என் கண்ணைப் பார்க்க மாட்டான் - மரியாதையில் அவன் தலை குனிந்திருக்கும்."
"அவனிடம் ஒழுக்கம் இல்லை என்றால், அவன் என்னுடன் இருந்திருக்க மாட்டான். தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் நல்ல மனிதர், என்னிடம் அடிக்கடி பேசுவார். ஆனால், இடையில் இருப்பது யார்? அவர்கள் வருங்கால இந்திய கேப்டனின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். இந்த அநியாயத்தைச் செய்வது யார்? அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவது யார்? புரோ கபடியின் பெயரைக் கெடுக்காதீர்கள்; இது ரத்தத்தாலும், கடின உழைப்பாலும் கட்டப்பட்டது."
"அவன் ஒழுங்கீனமானவன் என்றால், சீசன் 9-ல் ஏன் அவனை எடுத்தீர்கள்? ஈகோவுக்கும் ஒழுங்கீனத்திற்கும் வித்தியாசம் உள்ளது; வீரர்களுக்கு ஈகோ, அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் ஒழுக்கம் தேவை. லீக் ஆணையர்கள் அனுபம் கோஸ்வாமி மற்றும் பிரசாத் ராவ் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். 140 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த வீரன் அவன். அவனிடம் ஒழுங்கீனம் இருந்தால், அவருக்கு அறிவுரை சொல்லுங்கள், ஆனால் அநியாயமாக அவரை விடுவிக்காதீர்கள். இந்த சீசனில் அவன் விளையாட வேண்டும்" என்று ரந்தீர் சிங் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தலைவாஸ் அணிக்கு இது ஒரு பெரும் பின்னடைவுதான். தங்கள் நட்சத்திர வீரரையும், கேப்டனையும் இழந்துள்ளது. மறுபுறம், இந்திய கபடியின் முகமாகப் பார்க்கப்படும் பவன் ஷெராவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு, அவரது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது வெறும் ஒழுங்குப் பிரச்சினையா அல்லது அணிக்குள் நடந்த ஈகோ மோதலா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புரோ கபடி லீக் நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஒரு வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்பதே கபடி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.