டெல்லி: 2025 புரோ கபடி லீக் தொடரின் மினி-குவாலிஃபையர் சுற்றில், தெற்கு மாநிலங்களின் பலம் வாய்ந்த அணிகளான தெலுங்கு டைட்டன்ஸும், பெங்களூரு புல்ஸும் மோதின. தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், 37-32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று 'எலிமினேட்டர் 3' சுற்றுக்கு முன்னேறியது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர்களான பரத் ஹூடா மற்றும் விஜய் மாலிக் ஆகியோரின் 'சூப்பர் 10' (10 அல்லது அதற்கு மேற்பட்ட ரெய்டு புள்ளிகள்) முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம், பெங்களூரு புல்ஸ் அணிக்காக அயல்நாட்டு வீரர் அலி-ரேசா மிர்சாயன் 'சூப்பர் 10' எடுத்த போதிலும், அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

இந்தத் தோல்வியின் மூலம் பெங்களூரு புல்ஸ் அணி போட்டியிலிருந்து முழுமையாக வெளியேறவில்லை. அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது; திங்கள்கிழமை நடைபெறும் 'எலிமினேட்டர் 2' போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணியை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
ஆட்டம் தொடங்கியது முதலே அனல் பறந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றன. தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் விஜய் மாலிக்கும், புல்ஸ் அணியின் அலி-ரேசாவும் ரெய்டுகளில் புள்ளிகளை எடுத்துவர, பரத் ஹூடாவின் இரண்டு புள்ளி ரெய்டு டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையைக் கொடுத்தது. சுபம் ஷிண்டே மற்றும் தீபக் சங்கர் ஆகியோரின் சிறப்பான டேக்கிள்களால் இரு அணிகளின் தடுப்பாட்டமும் வலுவாக இருந்தது. முதல் பாதியின் முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் 16-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் தடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். புல்ஸ் அணியின் ஆஷிஷ் மாலிக்கின் இரண்டு புள்ளி ரெய்டும், சத்யப்பா மட்டியின் டேக்கிளும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதன் மூலம், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 'ஆல் அவுட்' ஆக்கிய பெங்களூரு புல்ஸ், முதல் முறையாகப் போட்டியில் முன்னிலை பெற்றது. அடுத்து, அலி-ரேசாவின் இரண்டு புள்ளி ரெய்டால் பெங்களூரு புல்ஸ் அணி 24-21 என முன்னிலையைத் தக்கவைத்தது. உடனடியாகப் பதிலடி கொடுத்த தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பரத், தனது இரண்டு புள்ளி ரெய்டாலும், அஜித் பவாரின் டேக்கிளாலும் ஸ்கோரை 24-24 என சமன் செய்தார். ஆட்டம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்ததால், பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியது.
கடைசி நிமிடங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பரத் ஹூடா தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்ய, ஷங்கர் கடாயின் சிறப்பான டேக்கிளால் பெங்களூரு புல்ஸ் அணி 'ஆல் அவுட்' ஆனது. இதனால், டைட்டன்ஸ் அணி 31-28 என வலுவான முன்னிலையைப் பெற்றது. ஆட்டம் முடிய ஆறு நிமிடங்களே இருந்த நிலையில், விஜய் மாலிக் தனது பங்கிற்கு ரெய்டுகளில் புள்ளிகளை எடுத்துவர, டைட்டன்ஸ் அணி நான்கு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையைத் தக்கவைத்தது.
கடைசி நிமிடங்களில், புல்ஸ் அணியின் அலி-ரேசா தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், இறுதி நேரத்தில் அசத்திய தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் விஜய் மாலிக், தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்து, அணியின் வெற்றியை 37-32 என உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 'எலிமினேட்டர் 3' சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டி 1: எலிமினேட்டர் 2 - பாட்னா பைரேட்ஸ் vs பெங்களூரு புல்ஸ்
போட்டி 2: குவாலிஃபையர் 1 - புனேரி பல்டன் vs தபாங் டெல்லி