ஜெய்ப்பூர்: 2025 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி, கடைசி வினாடி வரை யார் வெல்வார்கள் என்று கணிக்க முடியாத பரபரப்புடன் நகர்ந்தது. இறுதியில் 38 - 36 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மன்பிரீத் சிங், புரோ கபடி லீக் வரலாற்றிலேயே 100 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் பயிற்சியாளர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியின் தொடக்க நிமிடங்களே, ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ் தலைவாஸ் அணி, தங்களது நட்சத்திர ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால்-இன் அபாரமான ஆட்டத்தால் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அவரது தொடர்ச்சியான ரெய்டுகள் ஹரியானா தடுப்பு ஆட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதை பயன்படுத்தி தமிழ் தலைவாஸ் அணி ஒரு விரைவான 'ஆல்-அவுட்'டை நிகழ்த்தி வலுவான முன்னிலையைப் பெற்றது. மறுபுறம், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. இருப்பினும், மெல்ல மெல்ல அவர்கள் ஆட்டத்திற்குள் திரும்பினர். ஹரியானா அணியின் ரெய்டர் வினய், அடுத்தடுத்து புள்ளிகளைக் கொண்டு வந்து அணிக்கு நம்பிக்கை ஊட்ட, தடுப்பாட்டத்தில் ஜெய்தீப், தமிழ் தலைவாஸின் முக்கிய ரெய்டர்களை மடக்கிப் பிடித்து ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
முதல் பாதியின் நடுப்பகுதியில், ஹரியானா அணி ஒரு 'ஆல்-அவுட்'டை நிகழ்த்தி பதிலடி கொடுக்க, ஆட்டம் ஹரியானாவை நோக்கி நகர்ந்தது. முதல் பாதியின் முடிவில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 25-16 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்று, ஆட்டத்தைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
இரண்டாவது பாதி தொடங்கியதும், ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜுன் தேஷ்வால், விட்ட இடத்திலிருந்து தனது அதிரடியைத் தொடர்ந்தார். ஹரியானாவின் முக்கிய தடுப்பாட்ட வீரர்களான ஜெய்தீப் மற்றும் சாஹில் நர்வால் ஆகியோரை அடுத்தடுத்த ரெய்டுகளில் வெளியேற்றி, அவர் தனி ஒருவனாகப் போராடினார்.
தடுப்பாட்டத்தில் ஹிமான்ஷு-வும் சிறப்பாகச் செயல்பட, தமிழ் தலைவாஸ் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. ஆனால், ஹரியானா அணி ஒரு புலி பதுங்குவது போல பதுங்கி, சரியான நேரத்தில் பாய்ந்தது. மாற்று வீரராகக் களமிறங்கிய மயங்க் சைனி, ஒரு புயலைப் போல தமிழ் தலைவாஸ் எல்லைக்குள் புகுந்து, அடுத்தடுத்து மல்டி-பாயிண்ட் ரெய்டுகளை நிகழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவருக்கு சிவம் படாரே-வும் தனது பங்கிற்கு ரெய்டுகளில் உதவ, ஹரியானா அணி மீண்டும் முன்னிலை பெற்றது.
போட்டியின் கடைசி நிமிடங்கள், இரு அணிகளின் தடுப்பாட்ட வீரர்களுக்குமான சோதனையாக அமைந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் அருள் நந்தபாபு ஒரு அற்புதமான 'சூப்பர் டேக்கிள்'லைச் செய்து, தனது அணியின் வெற்றி நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
கடைசி ஐந்து நிமிடங்கள் வரை யார் வெல்வார்கள்? என்று சொல்ல முடியாத அளவிற்குப் பரபரப்பாக நகர்ந்தது. ஆனால், பயிற்சியாளர் மன்பிரீத் சிங்-இன் ஆலோசனையுடன் ஹரியானா வீரர்கள் நிதானத்தையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தினர். முக்கியமான தருணத்தில், வினய் ஒரு முக்கிய ரெய்டைச் செய்ய, கடைசி நிமிடத்தில் ஹர்தீப், தமிழ் தலைவாஸின் முக்கிய நம்பிக்கையான அர்ஜுன் தேஷ்வால்-ஐ மடக்கிப் பிடித்து, ஹரியானாவின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 38-36 என்ற புள்ளிக்கணக்கில் மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்தது.