ஐதராபாத் : புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை நேற்று பெங்களூர் புல்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டியது.
எனினும் தமிழ் தலைவாஸ் செய்த சிறுசிறு தவறால் அந்த அணி தோல்வியை தழுவியது. இறுதியில் பெங்களூர் அணி 36 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் 32 புள்ளிகளும் பெற்று நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை பெற்றது.

இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் அதிகபட்சமாக 6 புள்ளிகளும், சச்சின் அதிகபட்சமாக 5 புள்ளிகளும் பெற்றார். பெங்களூர் அணியில் அஜிங்கே பவர் அதிகபட்சமாக 5 புள்ளிகளை பெற்றார். அதற்கு முன்பு நடைபெற்ற குஜராத், புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி அபார வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதலில் புனே வீரர்கள் அதிரடியாக விளையாடி புள்ளிகளை குவித்தனர். அவர்களை சமாளிக்க குஜராத் வீரர்கள் தடுமாறினர். முடிவில் புனே அணி 49க்கு 30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 19 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி இந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் புனே அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, இரண்டு தோல்வி ஒரு டை என 20 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் உபி அணி 18 புள்ளிகளுடன் இருக்கிறது. நான்காவது இடத்தில் 17 புள்ளிகளுடன் பெங்கால் வாரியர் அணியும் ஐந்தாவது இடத்தில் ஹரியான அணி 16 புள்ளிகளுடனும் இருக்கிறது.
இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி மீண்டும் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் கண்டு களிக்கலாம்.