மும்பை: புரோ கபடி லீக் தொடர் 12 வது சீசன் இம்முறை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், குஜராத் ஜெயின்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கிறது.
இந்த தொடரில் லீக் சுற்றில் மொத்தமாக 108 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரின் ஃபார்மேட் புதியதாக மாற்றப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஒவ்வொரு அணிகளும் தலா 18 போட்டிகளில் விளையாடும். 9 போட்டிகள் சொந்த மண்ணிலும், ஒன்பது போட்டிகள் வெளியூரிலும் என்ற வகையில் நடத்தப்படும்.

இதே போன்று புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அனைத்து அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக இரண்டு பிளே- இன் போட்டிகளும், இறுதிப்போட்டி உட்பட ஏழு பிளே ஆப் போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் பிளே இன் சுற்றுகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். அதாவது முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருப்பது போல் ஐந்தாவது இடத்திலிருந்து எட்டாவது இடம் பிடித்துள்ள அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு தரப்படும்.
இந்த பிளே இன் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள அணியும், எட்டாவது இடத்தில் உள்ள அணியும் பல பரிட்சை நடத்தும். இதேபோன்று ஆறாவது இடத்தில் உள்ள அணியும் ,ஏழாவது இடத்தில் உள்ள அணியும் இரண்டாவது பிளே இன் போட்டிகளில் மோதும். முதல் பிளே இன் போட்டிகளில் வெற்றி பெறும் அணியும், இரண்டாவது பிளே இன் போட்டியில் வெற்றி பெறும் அணியும் எலிமினேட்டர் ஒன்றில் மோதுவார்கள்.
அதே சமயம் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் மோதும் அணிக்கு மினி குவாலிபயர் என்ற போட்டி நடைபெறும். இதில் தோற்கும் அணி எலிமினேட்டர் 2 வில் விளையாடுவார்கள். எலிமினேட்டர் ஒன்றின் வெற்றி பெறுபவர்களுடன் இந்த அணி மோதும். மினி குவாலிபயரில் வெற்றிபெறும் அணி எலிமினேட்டர் 3யில் மோதுவார்கள். அதில் எலிமினேட்டர் 2 வில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை சந்திப்பார்கள்.
இதேபோன்று குவாலிஃபயர் ஒன்று போட்டிகளில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும் தகுதி அடையும். தோற்கும் அணி குவாலிபையர் 2வில் மோதுவார்கள். இதில் எலிமினேட்டர் 3 இன் வெற்றி பெறும் அணியுடன் பலப்பரீட்சை நடத்துவார்கள். இப்படி பிளே ஆப் சுற்றில் ஏழு போட்டிகள் நடைபெறும்.
இதேபோன்று புரோ கபடி லீக் தொடரில் போட்டிகள் சமனில் முடிவடைந்தால் இனி டை பிரேக்கர் எனும் முறை படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த டை பிரேக்கரில் ஒவ்வொரு அணியிலும் ஏழு வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஐந்து ரைடுகள் வழங்கப்படும். இந்த ஐந்து ரைடுகளை யார் வரிசையாக மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட வேண்டும்.
இந்த டை பிரேக்கரில் நடைபெறும் அனைத்து ரைடுகளுமே டூ ஆர் டை (Do or die) என்ற முறைப்படி நடைபெறும். இதனால் ரைடு செல்லும் அணி புள்ளிகளை பெற முடியவில்லை என்றால் எதிரணிக்கு புள்ளிகள் கிடைத்துவிடும். இந்த டை பிரேக்கர் பகுதியில் Baulk line-ஐ தொட்டால் போனஸ் புள்ளிகளும் வழங்கப்படும். இந்த டை பிரேக்கரில் மாற்று வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.